Home Tamil கொத்தமல்லி சாதம்

கொத்தமல்லி சாதம்

0 comment
Published under: Tamil
கொத்தமல்லி சாதம் மிகவும் சுவையான மற்றும் சத்தான ஒரு உணவு ஆகும். இதை வெகு எளிதில் குறைந்த நேரத்திலேயே செய்து முடித்து விடலாம். இவை ஒரு கட்சிதமான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.

லஞ்ச் பாக்ஸ் ரெசிபி என்றாலே பெரும்பாலும் ஐந்தில் இருந்து பத்து ரெசிபிகள் தான் பிரபலமாக இருக்கின்றன. ஆனால் குறைந்த நேரத்தில் மிகுந்த சிரமமின்றி செய்யக்கூடிய லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகள் ஏராளம். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான மற்றும் சத்தான கொத்தமல்லி சாதம். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான கொத்தமல்லி சாதத்தின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Coriander Rice

Coriander Rice

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

கொத்தமல்லி சாதம் நாம் வழக்கமாக செய்யும் தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் போன்றவைக்கு ஒரு அருமையான மாற்று. நாம் வழக்கமாக செய்து சலித்து போன லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகளை தவிர்த்து இந்த வித்தியாசமான கொத்தமல்லி சாதத்தை செய்து கொடுத்தால் நம் பிள்ளைகளும் மிகுந்த ஆர்வத்தோடு இதை சுவைப்பார்கள். இந்த கொத்தமல்லி சாதத்தை நீங்கள் கட்டாயம் செய்து பார்த்து உங்கள் பிள்ளைகள் இதற்கு எவ்வாறு ரியாக்ட் செய்தார்கள் என்பதை எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

கொத்தமல்லி சாதம் செய்ய நாம் முதலில் கொத்தமல்லி, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், மற்றும் துருவிய தேங்காயை கொண்டு ஸ்பெஷலான மசாலா பேஸ்ட்டை தயார் செய்வோம். இந்த மசாலா பேஸ்ட் நாம் சேர்க்கும் வேகவைத்த பாசுமதி அரிசி, பச்சை பட்டாணி, கேரட், பீன்ஸ், வறுத்த முந்திரிப் பருப்பு, மற்றும் வேர்கடலையுடன் நன்கு ஒன்றோடு ஒன்று வெந்து மிக அட்டகாசமாக இருக்கும்.

சில குறிப்புகள்:

பாசுமதி அரிசியை வேக வைக்கும் தண்ணீரில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்தால் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வரும்.

பாசுமதி அரிசியை அடுப்பில் இருந்து இறக்குவதற்க்கு முன்பாக அதில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு எலுமிச்சை சாறை சேர்த்தால் சாதம் நன்கு மிருதுவாக இருக்கும்.

இவ் உணவின் வரலாறு:

கொத்தமல்லியை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே மனிதர்கள் பயிரிட்டு பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். இவை பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாக உதயமானவை என்பதால் கொத்தமல்லி சாதம் எந்த நாட்டில் முதல் முதலாக செய்யப்பட்டது என்பதற்கான தெளிவான தரவுகள் இல்லை. இருப்பினும் வரலாற்று ஆய்வாளர்கள் இவை ஆசிய கண்டத்திலோ அல்லது வட ஆப்பிரிக்காவிலோ அல்லது தென் ஐரோப்பாவிலோ உதயமாகி இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கிறார்கள்.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

கொத்தமல்லி சாதம் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 20 லிருந்து 25 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 20 லிருந்து 25 நிமிடம் எடுக்கும்.

கொத்தமல்லி சாதத்தை முழுமையாக சுமார் 45 நிமிடத்தில் இருந்து 50 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் இரண்டில் இருந்து மூன்று பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

கொத்தமல்லி சாதத்தை சுமார் ஒரு நாள் வரை ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் சுட வைத்து சுவைக்கலாம்.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

கொத்தமல்லி சாதம் செய்ய நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசியில் புரத சத்து, நார் சத்து, மற்றும் இரும்பு சத்து உள்ளது.

நாம் இதில் சேர்க்கும் வேகவைத்த பச்சை பட்டாணியில் புரத சத்து, நார் சத்து, விட்டமின் K மற்றும் A உள்ளது.

நாம் இதில் சேர்க்கும் கேரட்டில் நார் சத்து, பொட்டாசியம், விட்டமின் K1, B6, மற்றும் A உள்ளது. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.

இதில் நாம் பயன்படுத்தும் பீன்ஸில் புரத சத்து, நார் சத்து, இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், விட்டமின் C மற்றும் B 6 உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, மற்றும் புற்றுநோய் வரும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

இதில் நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த, மற்றும் எலும்பு திடத்தை அதிகரிக்க உதவுகிறது.

இதில் நாம் பயன்படுத்தும் முந்திரி பருப்பில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கொழுப்பு சத்து, காப்பர், சிங்க், பாஸ்பரஸ், மெக்னீசியம்,  மாங்கனீஸ், விட்டமின் K மற்றும் B 6 இருக்கிறது. இவை இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்க மற்றும் டைப் 2 டயபடீஸ் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

Coriander Rice
No ratings yet

கொத்தமல்லி சாதம்

கொத்தமல்லி சாதம் மிகவும் சுவையான மற்றும் சத்தான ஒரு உணவு ஆகும். இதை வெகு எளிதில் குறைந்த நேரத்திலேயே செய்து முடித்து விடலாம். இவை ஒரு கட்சிதமான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.
Prep Time15 minutes
Cook Time20 minutes
Total Time35 minutes
Course: Main Course
Cuisine: Tamil Nadu

தேவையான பொருட்கள்

  • 1 cup பாசுமதி அரிசி
  • 2 வெங்காயம்
  • 5 சின்ன வெங்காயம்
  • 6 பச்சை மிளகாய்
  • 2 கேரட்
  • 5 பீன்ஸ்
  • 1 பச்சை பட்டாணி
  • 6 பல் பூண்டு
  • 1 சிறு துண்டு இஞ்சி
  • 1/4 tsp மஞ்சள் தூள்
  • 3 tsp துருவிய தேங்காய்
  • 3 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 இலவங்கப்பட்டை
  • 1 பிரியாணி இலை
  • 1 நட்சத்திர சோம்பு
  • 15 முந்திரிப் பருப்பு
  • 1 கை வறுத்த வேர்க்கடலை
  • 1/2 tsp எலுமிச்சம்பழ சாறு
  • தேவையான அளவு கொத்தமல்லி
  • தேவையான அளவு புதினா
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு நெய்
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

  • முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினாவை நறுக்கி, பச்சை பட்டாணியை உரித்து, தேங்காயை துருவி, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு நெய் மற்றும் அரை மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் முந்திரிப் பருப்புகளை போட்டு அது பொன்னிறமாகும் வரை அதை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு அதில் வேர்க்கடலைகளை போட்டு அது சற்று நிறம் மாறும் வரை அதை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அரை மணி நேரத்திற்க்கு பிறகு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாசுமதி அரிசியை வேக வைப்பதற்க்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • தண்ணீர் சுட்டதும் அதில் பாசுமதி அரிசியை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் அரை மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்து சாதத்தை வேக வைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பச்சை பட்டாணியை போட்டு அதை வேக வைப்பதற்க்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பச்சை பட்டாணியை வேக வைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஒரு கை அளவு கொத்தமல்லி, ஒரு கை அளவு புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, நான்கு பச்சை மிளகாய், மற்றும் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காயை போடவும்.
  • பின்பு அதில் சுமார் நான்கு மேஜைகரண்டி அளவு தண்ணீரை சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் இரண்டு மேஜைகரண்டி அளவு நெய் மற்றும் ஒரு மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, பிரியாணி இலை, மற்றும் நட்சத்திர சோம்பை சேர்த்து அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
  • அரை நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வெங்காயம் சற்று நிறம் மாறும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் சற்று நிறம் மாறியதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கேரட், பீன்ஸ், மற்றும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பச்சை பட்டாணியை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.
  • ஐந்து நிமிடத்திற்க்கு பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் ஒரு மேஜைகரண்டி அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா பேஸ்ட்டை சேர்த்து ஒரு கையளவு தண்ணீர் தெளித்து அதை நன்கு கிளறி விட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
  • மசாலா பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியை சேர்த்து அரிசி உடைந்து விடாமல் அதை பக்குவமாக ஒரு கரண்டியின் மூலம் நன்கு கிளறி விடவும்.
  • அடுத்து அதில் நாம் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:

கொத்தமல்லி சாதம் செய்ய நாம் அவசியம் பாசுமதி அரிசியை தான் பயன்படுத்த வேண்டுமா?

அப்படியெல்லாம் ஏதுமில்லை. நீங்கள் வழக்கமாக உபயோகிக்கும் அரிசியை கொண்டு செய்ய வேண்டும் என்று எண்ணினீர்கள் என்றால் அதையே நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கொத்தமல்லி சாதத்தில் நாம் சேர்க்கும் காய்கறிகள், முந்திரி பருப்பு, மற்றும் வேர்க்கடலையை நாம் தவிர்த்து விடலாமா?

குறுகிய நேரத்தில் அவசரத்தில் செய்யும் போது நீங்கள் இதை தவிர்த்து விடலாம். அல்லது இவை உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் நீங்கள் தாராளமாக தவிர்த்து விடலாம். இருப்பினும் கொத்தமல்லி சாதத்தின் சுவையை இவை பல மடங்கு உயர்த்தும்.

கொத்தமல்லி சாதத்தை இன்னும் காரமாக செய்வது எப்படி?

நீங்கள் காரத்தை மிகவும் விரும்புபவர் என்றால் உங்களது காரத்திற்க்கேற்ப கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

கொத்தமல்லி சாதம் செய்ய நாம் செய்யும் மசாலா பேஸ்ட்டை முந்தைய நாள் இரவே தயார் செய்து வைத்துக் கொள்ளலாமா?

தாராளமாக நீங்கள் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.

 

 

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter